சனி, 20 ஜனவரி, 2024

எண்ணங்களை வசப்படுத்து.

எண்ணங்கள்.


எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும். (OV)

எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே, உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும். (TCV)

உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.(TAERV) - நீதிமொழிகள் 4: 23

அனைவரது மனதிலும் ஏதாவது ஒரு எண்ண ஓட்டம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். உறங்கும் போது கூட கனவுகள் வழியாக எண்ணங்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொருவரது மூச்சுக் காற்றிலும் எண்ணங்கள் பயணிக்கின்றன. இவ்வுலகில் ஒரு மனிதனது மூச்சு உள்ள வரை, அவரது எண்ணச் சுழற்சி நிற்காது. 

பொதுவாக எண்ணங்களை இருவகைப் படுத்தலாம். நல்ல சிந்தனை மற்றும் தீய சிந்தனை. நல்ல எண்ணங்கள் அனைத்து உயிரையும் தன்னைப் போல நேசிப்பதில் துவங்கி, இறுதியில் நம்மையும் மேன்மை படுத்தி, அநேகருக்குப் பயன் தரும் வாழ்க்கையாக நிறைவு பெறும். தீய சிந்தனை பிறரை விட உயர்வாகக் காணப்பட வேண்டும் எனும் பெருமையில் துவங்கி, இறுதியில் பொறாமை, சினம் எனும் தீயால் அனைத்தையும் அழித்து விடும்.

எண்ணங்களின் இயல்பு:

ஒருவர் மனதில் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் உருவாகுவது, முற்றிலுமாக, அவரது கையில் இல்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை. இது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. நாம் எந்த வயதில், எந்த நிலையில், எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நம் மனதின் தன்மைக்கு ஏற்றவாறு, நல்ல அல்லது தீய எண்ணங்கள் உருவாகி நம்மை ஊடுருவிக் கொண்டே இருக்கும்.

ஆக நம் மனதில் நல்ல எண்ணங்களும், தீய எண்ணங்களும் மாறி மாறி உருவாகி வெளிப்படுவது இயற்கையான இயல்பான செயல். 

நுட்பமாகச் சொல்வது எனில், மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு, அந்த எண்ணங்கள் உதயமாகும் மனிதனது விருப்பம் மட்டுமே காரணமில்லை. அவர் அறியாமலேயே, அவரது மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றி பல வகை விருப்பங்களை அவருக்குள் உருவாக்கிவிட்டு, அது அந்த விருப்பத்திற்குள் மறைந்து கொள்ளலாம்.

ஆகவே மனதில் இவ்விதம்தான் எண்ணங்கள் தோன்ற வேண்டும் என நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இவ்வாறுதான் எண்ணங்கள் இருக்க வேண்டும் என்பதை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியாது. எண்ணங்களை, “உதயமாகிறது” என்ற வார்த்தையில் குறிப்பிடும் போதே, அவை தானாகவே நம்மில் “தோன்றுபவை” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ''தானாக'' உருவாகும் ஒரு விசயத்தை, அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்தி வசப்படுத்த முடியாது அல்லவா?

எண்ணங்களின் தோற்றுவாய்:

நம் மனதில் பதிவாகியுள்ள பல அனுபவப் பதிவுகள்  நாம் அறியாதவை. அது ஓர் தொடர்ச்சியான தொகுப்பு. அதன் காலத்தை அறுதியிட்டுக் கூற இயலாது. அத்துடன், இப்போதும் நாம் விரும்பும், பார்த்தும், கேட்டும், சுவைத்தும், நுகர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பலவிதமான  அனுபவங்களிலிருந்தும், மனதில் நல்லதாகவோ, தீயதாகவோ தகவல்கள் உருவாகிப் பதிவாகின்றன. ஆக எண்ணங்கள் தோன்றுவதற்கு நம் மனதில் உள்ள அனுபவப் பதிவுத் தளங்களில், அன்றாடம் நாம் சேர்க்கும் தகவல்களும், ஆதியிலிருந்தே பதிவாகி, நாம்  அறியாது, நம்முள் உறைந்திருக்கும் பல கோடிக்கணக்கான தகவல்களும் காரணமாக உள்ளது. 

எண்ணங்களின் செயல்முறை:

ஒரு எண்ணம் நம் மனதில் உருவாகும் போது அதனுடன் கற்பனையில் நாம் உறவாடுகிறோம்.  நாம் அந்த எண்ணத்துடன் உறவாடவில்லை எனில் அந்த எண்ணம் தானாகவே மறைந்து விடும். எந்த எண்ணத்தோடு கற்பனையில் உறவாடுகிறோமோ, அது காட்சிகளாக விரிந்து, வார்த்தைகளாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. அப்போது அதனால் உண்டாகும் நல்ல, தீய பாதிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். அதுவும் ஒரு மனப் பதிவாகிறது. எத்தனை துயரம் தருவதாக இருந்தாலும், சில வலிமையான எண்ணங்களோடு கற்பனையில் உறவாடுவதை நம்மால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது. அது அத்தனை வீரியமானது. 

தேவையற்ற எண்ணங்களிலிருந்து விடுதலை.

மனதில் பதிந்து இருக்கும் அனுபவப் பதிவுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆக மனப் பதிவுகளில் பதிந்து இருக்கும், நாம் உணராத, அறியாத, எண்ணிக்கைக்கு அடங்காத பல கோடி தீய பதிவுகள் நீக்கப்பட வேண்டும். அனுதினம் பல  நல்ல பதிவுகள், மனதில் பதிவு செய்யப்படவேண்டும். அதனால் நல்ல செய்திகள் கேட்பது, நற் செயல்களில் ஈடுபடுவது, நல்ல நூல்களை வாசிப்பது, என மனதில் ஒருபுறம் பயனுள்ள அனுபவப் பதிவுகளை உருவாக்கிக் கொண்டே இருத்தல் வேண்டும். 

மனம் ஒரு நிலத்தைப் போன்றது. நிலத்தின் கரடு முரடான கற்களை அகற்றி, சரியாகக் கொத்தி, பண்படுத்தி, நல்ல விதைகளை ஊன்றி, நீர் பாய்ச்சி, உரமிட்டு, வேலியடைத்துக் காப்பாற்றினால், அந்த விதை வளர்ந்து, பெருகி, நற்பலன்களைத் தரும். இது ஒரு பெரும் பொறுமையுடன் நீண்ட காத்திருப்போடு செய்ய வேண்டிய தவம். அப்போது மனம் பக்குவப்படும். அதிலிருந்து தோன்றும் எண்ணங்களும் பயனுள்ளவையாக இருக்கும். நம் மனதில் தோன்றும் எண்ணங்களை விழிப்புடன் கண்காணிக்கும் பழக்கம் இயல்பாகிவிடும். தேவையற்ற எண்ணங்களில் கற்பனையில் உறவாடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நான் வேறு – எனக்குள் தோன்றும் இந்த தேவையற்ற சிந்தனைகள் வேறு, என்ற தெளிவான புரிதலும் ஏற்படும். இந்த தெளிவு மனதில் எந்தளவு உறுதியாக உள்ளதோ, அந்தளவிற்கு மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணமும், சிந்தனையையும் உங்களால் இலகுவாக உதறித் தள்ள முடியும். அந்த தீய எண்ண ஓட்டங்கள் உங்களைப் பாதிக்க முடியாது.

மனதில் தோன்றும் பலவகையான எண்ண ஓட்டங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அவ்விதமாகத் தோன்றும் எண்ணங்களுக்கு எவ்விதம் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது நமது அர்ப்பணிப்பில் தான் உள்ளது. 

மனதை தன் வசப்படுத்துவதை விட மனிதருக்கு வேறு எது இந்த உலகில் மிகப் பெரிய சவாலாக இருக்கக் கூடும்?


படம்: இணையத்திலிருந்து நன்றியுடன்..